Sunday, December 19, 2010

விகடன் கவிதை































பாசத் தீ
---------------------------------------
ஊருக்குச் சென்று
திரும்பும்போதெல்லாம்
சொல்லுவார் அப்பா
'உடம்பைப் பார்த்துக்கப்பா.’
என்று

எனக்கும் ஆசைதான்
சேர்ந்தாற்போல்
நான்கு நாட்கள் விடுமுறையில்
அருகிலேயே இருந்து
அப்பாவைக் கவனித்துக்கொள்ள
என்றாலும்
ஒருபோதும் முடிந்ததில்லை

ஒவ்வோர் இரவிலும்
கட்டிப்பிடித்தபடி
தூக்கத்தில்
மேலே போடும்
மகனின் கால் பிடித்து
அமுக்கிவிடுவேன் இதமாக
அப்பாவை எண்ணிக்கொண்டு!
---------------------------------------------
- ஆர்.சி.மதிராஜ்
--------------------------------------------------
நன்றி : ஆனந்த விகடன் 22.12.2010

Sunday, December 12, 2010

கவனிக்கத் தவறிய அப்பா
















கவனிக்கத் தவறிய அப்பா
---------------------------------------------------------
தாத்தா சொத்தென்று எதுவும் இல்லை
அப்பாவின் எழுபது வருட உழைப்புதான்
உருவாகி இருக்கிறது
வீடுகளாகவும் விளை நிலங்களாகவும்.

ஆறு பிள்ளைகளுக்கும்
ஆனது திருமணம்
ஏதும் பிரச்னையே இல்லை.

ஒரு சுபயோக சுபதினத்தில்
பைசா பாக்கி இல்லாமல்
பிரித்துக்கொண்டாயிற்று
சொத்துக்களையும்.

கடைசியாகத்தான் பேசிக்கொண்டோம்
அப்பா, அம்மா எங்கே இருப்பாங்க
யார் எவ்வளவு தரணும் என்று.

அப்பாவின் கண்கள்
கலங்கியதா என்றெல்லாம்
நான்
பார்க்கவில்லை!

- ஆர்.சி.மதிராஜ்
-----------------------------------------------------
நன்றி : ஆனந்த விகடன் (15 -12 -2010)

Saturday, October 9, 2010

தபூசங்கர் முன்னுரை






பாருங்கள் திறக்கப்படும்...

காதல் கவிதைகளில் காதல் இருந்தால் போதும். கவிதை இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் மதியின் காதல் கவிதைகளில் காதலும் இருக்கிறது; கவிதையும் இருக்கிறது.

`அப்படிப் பார்க்காதே' என்பது தலைப்பு. அப்படிப் பார்த்தால்தான் காதல். அப்படிப் பார்த்தால்தான் கவிதை. அப்படிப் பார்ப்பதும் பார்க்கப்படுவதும்தான் அவனுக்கும் அவளுக்கும் பிடிக்கும். ஆனாலும் அவனும் அவளும் அவ்வப் போது சொல்லிக் கொள்வதுண்டு... `அப்படிப் பார்க்காதே' என்று. அவர்கள் மொழியில் அதற்கு அர்த்தம் `அப்படிப் பார்' என்பதே.

அப்படிப் பார்க்கிறபோதுதான் பார்க்கிற கண்கள், மகிழ்ச்சி அடைகின்றன. அப்படிப் பார்க்கப்படுகிறபோதுதான் பார்க்கப்படுகிற கண்களும் மகிழ்ச்சி அடைகின்றன.

பார்ப்பதற்காகப் படைக்கப்பட்டவைதாம் கண்கள் என்றாலும், எல்லாக் கண்களும் ஏங்குவது நம்மை யாராவது பார்க்கமாட்டார்களா என்றே. அப்படிப் பார்ப்பவர்களை அது மறப்பதே இல்லை. விழிகளுக்கும் இமைகளுக்கும் நடுவே எங்கோ அவர்களின் உருவத்தை ஒட்டி வைத்துக்கொள்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இமைகளை மூடி, அவர்களைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டுக் கொள்கிறது. பார்க்கிற சக்தியை இழந்த பிறகும் அவர்களைப் பார்த்துக் கொள்கிற சக்தி மட்டும் அவற்றுக்கு இருக்கும்.

உருகி உருகி அழைத்தால்தான் ஏன் என்று கடவுள் கேட்பான் என்கிறார்கள். ஆனால் பார்த்தாலே ஏன் என்று கேட்கும் காதல். ஆம்... கடவுளின் கதவுகளைத் தட்டத்தான் கைகள் வேண்டும். காதலின் கதவுகளைத் தட்ட கண்களே போதும்.
இந்தக் கவிதைகளை உங்கள் கண்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது... இந்தக் கவிதைகளில் இருந்து ஒரு ஜோடி கண்கள், உங்கள் கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் அப்படி.  அது காதலின் கண்கள்.

எனது கவிதை நூல்களுக்கு வடிவமைப்பை அழகாய் செய்பவர் இந்த மதி. இப்போது இவரே கவிதையும் எழுதியிருக்கிறார் அதே அழகோடு.

இந்த நூலிலிருந்து ஒன்றிரண்டு கவிதைகளை மட்டும் பிரித்தெடுத்து நான் உதாரணம் காட்டினால் மற்ற கவிதைகள் என்னைக் கோபித்துக் கொள்ளும். கவிதைகளின் கோபத்தை எதிர் கொள்ள என்னால் முடியாது. வாழ்த்துக்கள்!

அன்புடன்
தபூ சங்கர்
 ---------------------------------------------------
அப்படிப் பார்க்காதே...
காதல் கவிதைத் தொகுப்பிற்கு
அளித்த முன்னுரையிலிருந்து...
 ---------------------------------------------------

நக்கீரன் வெளியீடு
105 ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 2848 2424
விலை : ரூ.80/- 

அப்படிப் பார்க்காதே...

முதல் கவிதைத் தொகுப்பிலிருந்து...

முத்தம் தருவதாகச் சொல்லி
பேசிப் பிரிந்த அவசரத்தில்
உதடு சுழித்து
ஏமாற்றிச் சென்றாய்

நீ தராது சென்ற முத்தத்தை விட
அதிகம் சுவைத்தது
நீ சுழித்த உதடு
---------------------------------------------------

ன் கூந்தலிலிருந்து
வாடிய பூக்களைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்
 ---------------------------------------------------

ன் முத்தம் கொடுத்தோம்
என்றாகிவிட்டது

இப்போது
எவருடனும் பேசப்
பிரியப்படவில்லை
இதழ்கள்

 ---------------------------------------------------


த்தனை
கோபமென்றாலும்
ஒரு முழம் மல்லிகைக்கே
மயங்கிவிடுகிறாய்
நீ
நானும்

 ---------------------------------------------------

டற்கரையில்
தன் தலையில் தானே
மண்ணள்ளிப் போட்டு
விளையாடும்
குழந்தையையும் என்னையும்
மாறி மாறிப் பார்க்காதே

 ---------------------------------------------------

ன் அம்மாவின்
அதட்டலுக்குப் பயந்து
அவசரமாய்
சன்னலிலிருந்து
விலகிப் போனாய்

நான்
பார்த்து ரசிப்பதற்காக
உன்னை
அங்கேயே விட்டுவிட்டு

 ---------------------------------------------------

சொல்லித் தெரிவதில்லை காதல்
ஐலவ்யூ என்று
உன்னிடம் உளறுவதில்
உடன்பாடில்லை எனக்கு
நான் உன்னைக் காதலிப்பதை
உணரவேண்டும் நீயாய்
பிறகு
சொல்லிக்கொள்ளாமலேயே
காதலிப்போம் இருவரும்

 ---------------------------------------------------

வ்வொரு நாளின்
நிலவிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நாம் இருவரும் சேர்ந்து
முதன் முதலாய் பார்த்த
அந்த முழு நிலவை

 ---------------------------------------------------

ன் குழந்தைக்கு
உன் பெயரை வைப்பதில்
விருப்பமில்லை எனக்கு

என்றேனும்
குழந்தையை
அதட்ட நேரிடலாம்

 ---------------------------------------------------

நினைவேட்டில்
எழுதும்போது
அழுதிருக்கவேண்டாம்
நீ

அழிந்த கையெழுத்து
சொல்லிக் கொண்டிருக்கிறது
நீ சொல்லாத
காதலை


 ---------------------------------------------------

நக்கீரன் வெளியீடு
105 ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 2848 2424


விலை : ரூ.80/- 

Friday, October 8, 2010

உலகளாவிய காதல் திரைப்படங்கள்

உலகளவிய
காதல் திரைப்படங்களில்
மிச்சிறந்த அவசியம் பார்க்கவேண்டிய
படங்களின் பட்டியல்

1. The Notebook
2. Titanic (1997)
3. 10 Things I Hate About You (1999)
4. Bicentennial Man (1999)
5. Dirty Dancing (1987)
6. Gone With the Wind (1941)
7. An Affair to Remember (1957)
8. Amelie (2001)
9. Pretty Woman (1990)
10. Runaway Bride (1999)
11. Roman Holiday (1953)
12. Casablanca (1943)
13. City of Angels (1998)
14. When Harry Met Sally (1989)
15. Edward Scissorhands (1990)
16. Father of the Bride (1991)
17. Mrs. Doubtfire (1993)
18. My Fair Lady (1964)
19. My Best Friend's Wedding (1997)
20. Message in a Bottle (1999)
21. Modern Times (1936)
22. It Happened One Night (1934)
23. I Am Sam (2001)
24. Maid in Manhattan (2002)
25. Dying Young (1991)
26. Romancing the Stone (1984)
27. Sleeping With the Enemy (1991)
28. French Kiss (1995)
29. You’ve Got Mail (1998)
30. Sabrina (1995)
31. Ghost (1990)
32. A Walk To Remember (2002)
33. It's a Wonderful Life (1947)
34. Miracle on 34th Street (1947)
35. The Proposal (2009)
36. Sweet November (2001)
37. While You Were Sleeping (1995)
38. Forever Young (1992)
39. Pearl Harbor (2001)
40. Hannah Montana The Movie (2009)
41. Forrest Gump (1994)
42. The Reader (2008)
43. Summer of '42 (1971)
44. Lilya 4-ever (2002)
45. The Clock (1945)
46. The Piano (1993)
47. Big (1988)
48. Every Time We Say Goodbye (1986)
49. The Seven Year Itch (1955)
50. Bus Stop (1956)

Thursday, October 7, 2010

குட்டி இளவரசி கவிதை புத்தகத்துக்கு அண்ணன் அறிவுமதி எழுதிய முன்னுரை...

















காலம் நீள்கிறது என்றாலும்...
வாழ்வு நீள்கிறது என்றாலும்...
காதல் நீள்கிறது என்றுதான் பொருள்.
உலகம் வாழ்கிறது என்றாலும்
உயிர் வாழ்கிறது என்றாலும்
காதல் வாழ்கிறது என்றுதான் பொருள்.


காதல் நீளும். காதலே நீட்டும்.
காதல் வாழும். காதலே வாழ்விக்கும்.
காதல் வாழ்வும் தமிழ் வாழ்வும்
சந்திக்கும் இடம்
இயற்கை.
இயற்கையே காதலும்.
பாரதிச் சொல்லில்...
காதல் இயற்கை.
மகரந்தச் சேர்க்கைதான் காதல்
சேர்க்கையும்.
பூக்களைச் சுற்றிய வண்டுகளின்
ஒலிச் சிந்தல்கள்தாம்
காதல் கவிதைகள்.
வழுக்குப் பாறைகளில் ஏறி... சறுக்கி
விளையாடிய குழந்தைகளின்
காலம்
சங்க காலம்.
பூங்காக்களின் தகரப் பலகைகளில் ஏறி... சறுக்கி
விளையாடுகிற குழந்தைகளின்
காலம்
தற்காலம்.


காலங்கள் மாறலாம்.
சறுக்கி விளையாடுதல் மாறாது.
காதல் கவிதைகளும்தாம்.
எழுதி மாளாது.
எழுதி எழுதி மாளாது.
புன்செய்க் காடுகளில், கம்மாக் கரைகளில்...
கருவேலங் காடுகளில்
கரட்டு மேடுகளில்... என
எழுதிப் பழகாத கைநாட்டுக் காலத்துத்
தெம்மாங்குகள்தாம்...
ஆண்டாள்களின் பக்திக் காதலாகி...
அய்யாவின் மிரட்டலுக்குப் பயந்து தெளிந்து
படிப்புத் தமிழ் இளைஞர்களின்
காதல் கவிதைகளாய்ப் பெருகிக் கொண்டிருக்கின்றன.


பாலசூர்யா, லலிதா, அண்ணன் அறிவுமதி, புகழேந்தியுடன்...
ஊர்மண் உயிர்ப்புகளை உள்வாங்கிக் கொண்டு
ஊரிலிருந்து புறப்பட்டு வந்த வாழ்வை
நகர நடுவிலும் நசுங்கிவிடாமல் பாதுகாக்கும்
தம்பி மதியின் படைப்பு வளர்ச்சி எனக்குள்
மகிழ்ச்சி செய்கிறது.
 

‘பூங்கா மரத்தடியில்
உதிர்ந்து விழுந்த
இலைகளின் மீது
பதித்துச் செல்லாதீர்கள்
பாதச் சுவடுகளை
சருகுகளினூடே
தேடிக் கொண்டிருக்கலாம்
பழைய காதலொன்று
தொலைந்து போன
தன் பச்சையத்தை’

இயல்பாக... ஆனால்
எம் புன்செய் ஈரத்தின் நெகிழ்வாகக் கிடைத்துள்ள கவிதையிது.
 

‘உதடுகளின் வரிகளை
எண்ணத் துவங்கினேன்’

ஒரு கைதேர்ந்த நிழற்படக்காரனின்
குவி கண்ணாடியால் மிக அருகில் சென்று
உற்றுநோக்குதல் தன்மை
கவிதைக்குள் நிகழ்கிறது.
 

‘பேருந்தில்
நின்றபடி செல்லும்போது
தொங்கும்
கைப்பிடிகளில் ஒன்றைப்
பிடிமானமாய்ப் பற்ற நேர்கையில்
உனது கையாகவே
உணர்கிறேன்’

மிக மிக அழகிய கவிதையிது.
அடிக்கடி அனைவரும் பயன்படுத்துகிற ஒரு பொருளை
கவிதைப் பொருளாக்கிக் காதல் செய்வதில் சுவைஞனை சொடுக்கி இழுப்பது சுலபம்.
இந்தக் கவிதைக்கு அது வாய்த்திருக்கிறது.

‘நீ வீதியில் இறங்கியபோது
சாரலாகத்தான் தொடங்கியது
மழை
குடை விரித்த
கோபத்தில்தான்
கொட்டித் தீர்த்துவிட்டது’


மழைக்கோபம் நியாயமானதுதானே!
மழை... கோபக்காரி.
மழையை மழையாய்
வாங்கத் தெரியாதவர்களிடம்
அவள் முரண்படுவாள். மோதுவாள்.
காதலைக் காதலாய்
வாங்கத் தெரிந்தவர்களுக்குக்
காதல்...
தேவதைக்காரி.
அதனால்தான்
தம்பி மதிக்கு
அவள் உடன்பட்டிருக்கிறாள்.
உயிர் தளும்பும் காதல்கவிதைகளை
ஊற்றி ஊற்றித் தருகிறாள்.
‘மதி’ காதல் கவிதைக்காரர்களில்
இன்றியமையாத இடத்தை
உறுதியாகப் பெறுவார்.


 ............................................................................
 நூல் கிடைக்குமிடம்
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.80/- 

பழநிபாரதி முன்னுரை


எனது காதலோடு விளையாடி கவிதை நூலுக்கு அண்ணன் பழநிபாரதி அளித்த முன்னுரை...



பொம்மைகளுக்கு உயிர்கொடுக்கிறது விளையாட்டு. ஊட்டிவிட்டு, உடைமாற்றி, முத்தமிட்டு மடியில் சாய்த்து, தட்டிக்கொடுத்துத் தூங்கவைக்கின்றன குழந்தைகள். ஆனாலும் தூங்குவதில்லை பொம்மைகள். பிறகு ஒன்றையொன்று தழுவிக்கொண்டு ஒரே நேரத்தில் உறங்கிவிடுகின்றன. அது அலுப்போ சலிப்போ அல்ல; விளையாட்டின் உச்சம். அந்த உறக்கத்திற்காகத்தான் அத்தனை விழிப்பு. அது உறக்கமல்ல; தியானம்.

வெண்டைக்காய்க் காம்பில் பொட்டு, வேர்க்கடலைத் தோடுகள், தென்னங்கீற்றில் மோதிரங்கள், பூவரசு இலையில் நாத
சுவரம், மாலை மாற்றும் மரப்பாச்சிகள், ஆவி பறக்கும் மண் இட்டிலிகள்...

விருந்தோம்பலுக்குப் பிறகு தட்டுகளைக் கழுவிக் கழுவிக் காக்கைகளுக்கு ஊற்றும் கரிசனங்கள்.

இயற்கையோடு இயைந்த இந்த இளம் விளையாட்டில் எத்தனை அழகான மெய்ப்பாடுகள்?

இந்தச் சிறு விளையாட்டின் திருவிளையாடல்தான் காதல். தீராத விளையாட்டுப் பிள்ளைகள் காதலர்கள்.

உன்
உள்ளங்கையில்
உருட்டி
விளையாடுவதற்கென்றால்
சொல் தருகிறேன்
ஒரு கண்ணீர்த்துளியை

என்கிறான் மதி.

கண்ணீரை எல்லோருடைய கைகளிலும் விளையாடத் தந்துவிட முடியாது. கண்ணீரைக் கைகளால் அல்ல; கண்களால் வாங்குகிற காதல் வேண்டும். அந்தக் கண்ணீரில் தன் முகத்தைப் பார்க்கிற கண்கள் வேண்டும். அதன் வெதுவெதுப்பையும் ஈரத்தையும் உப்பையும் உயிர்வரை நினைந்துருகும் உள்ளம் வேண்டும்.

பனித்துளி ஒன்று மல்லிகையிடம் கேட்டது
என்னை உன் இதயத்தில்
என்றென்றும் வைத்திருப்பாயா
மல்லிகை-
ஐயோ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே
மண்ணில் உதிர்ந்து விழுந்துவிட்டது

தாகூரின் பனித்துளியின் ஈரத்தை, தம்பி மதியின் கண்ணீர்த்துளியில் நான் காண்கிறேன். இது ஒப்பீடு அல்ல; அவர் ஏற்றித் தந்த விளக்கை இவன் ஏந்திக் கொண்டிருப்பது.

படிக்கட்டுப் பயணத்தில்
யாராலோ தவறவிடப்பட்டு
தனிமையில்
தெருவோரம் கிடக்கும்
இந்த ஒற்றைக் காலணிக்கும்
இருக்கும்தானே
காதலின் வலி

என்று உயிர்வலி உணர்ந்தவனாக மதி இருக்கிறான். கை தவறி விழுந்து உடைந்த பொம்மைக்காகத் தேம்பும் எதிர்வீட்டுக் குழந்தையைச் சமாதானம் செய்து, ஆறுதல் அளிப்பவளாக அவனது காதலி இருக்கிறாள். இதுதான் காதல்; இவர்கள்தாம் காதலர்கள்.

எல்லா உயிர்களுக்காகவும் துடிக்கிற ஓர் இதயத்தில்தான் உண்மையான காதல் உருவாக முடியும். அந்தப் பிரியங்களின் கண்ணிகளில்தாம் உயிர்ச்சங்கிலி பின்னப்பட்டிருக்கிறது. யாரால் பிரிக்க முடியும்? யாரால் பிரிய முடியும்?

நீ
எவ்வளவு
அழகானவள் என்று
நீயே பார்த்துக்கொள்ள
படைக்கப்பட்டவைதாம்
என் கண்கள்

நான் சந்தித்த பெண்களிலேயே அவளுக்குத்தான் கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இதயம் இருந்தது என்று எழுதினான் கண்ணதாசன். காதல் கசியும் கண்களுக்குத்தாம் அப்படிப்பட்ட நுட்பமான அகத்தின் தரிசனம் கிட்டும்.


மௌனங்கள் போர்த்திய விழிகளில், உருண்டு வரும் கண்ணீர்த்துளி மறைத்து, உடல் நடுங்கி, உதடு கடித்து அவள் நின்றபோதுதான் மதி, தன் காதலின் முழுமையை அடைந்திருக்கிறான்.

முழுமையான காதல் அழிவதில்லை. அது ஆதிக் கடலின் அடியில் முத்துச்சிப்பிக்குள் படுத்திருக்கும். பறவைகளின் கூட்டில் வசித்திருக்கும். பகலெல்லாம் பூக்களோடு; இரவெல்லாம் நட்சத்திரங்களோடு விளையாடிக்கொண்டே இருக்கும்.

காதலாக மலர்ந்திருக்கும் மதிக்கு அன்பில் நனைந்த எனது வாழ்த்துகளை அள்ளித் தருகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பழநிபாரதி
 ............................................................................
 நூல் கிடைக்குமிடம்
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.40/- 

குட்டி இளவரசி





















லகின்
முதல் பெண்
பிறந்த அன்றுதான்
தன்னைத் தானே
சுற்றிக் கொள்ள ஆரம்பித்தது
இந்த பூமி
கிறுக்குப் பிடித்து
 
---------------------------------------

நீ வீதியில் இறங்கியபோது
சாரலாகத்தான் தொடங்கியது
மழை

குடை விரித்த
கோபத்தில்தான்
கொட்டித் தீர்த்து விட்டது

 ---------------------------------------

ப்போதும் சாத்தியிருக்கும்
உன் வீட்டு சன்னல்
நினைவூட்டுகிறது
ஓவியம் வரையத் தயாராய்
காத்திருக்கும் கித்தானை

எப்போதாவது
சன்னல் திறந்து நீ
வேடிக்கை பார்க்கையில்
ஓவியமாய் உன்னையே
இட்டு
நிரப்பிக் கொள்கிறது

 ---------------------------------------

பேருந்தில்
நின்றபடி செல்லும்போது
தொங்கும் கைப்பிடிகளில் ஒன்றை
பிடிமானமாய் பற்ற நேர்கையில்
உனது கையாகவே
உணர்கிறேன்

 ---------------------------------------

ல்லா நண்பர்களும்
ஏதேதோ எழுதித்தந்த
நினைவேட்டில்
எதுவுமே எழுதாமல்
திரும்பக் கொடுத்துவிட்டாய்

எனக்குத் தெரியும்
வார்த்தைகள் ஏதும் கிடைக்காத
உன் தவிப்பும்
அந்த வெற்றுப் பக்கங்கள்
சுமந்து வந்த
உனது காதலும்

 ---------------------------------------

ண்மையைச் சொல்
நீ தனிமையில்
கண்ணாடி முன்
நிற்கையில்
தெரிகிறதா இல்லையா
என் முகம்

 ---------------------------------------

பெரும்பாலான
திருமணங்களின்போது
ஒலிக்கப்படும்
மங்கல இசைகளுக்கிடையில்
மௌன சாட்சியாய்
கேட்கிறது
நசுக்கப்பட்ட காதலின்
விசும்பல் ஒலி

 ---------------------------------------

நீ
உதடுகளை
ஈரப்படுத்திக்கொள்ளும்
அழகைப் பார்த்து
ரசித்தபோதுதான்

உணர்ந்தேன்
மழையின் ருசியை
---------------------------------------


ரு
குட்டி இளவரசி பற்றிய
கதை சொல்லவா என்றேன்

அந்தக் கதையைக் கேட்டு
நீ தினமும்
நச்சரிக்கும்போதெல்லாம்
இளவரசி தூங்குகிறாள்
விளையாடப் போயிருக்கிறாள்
என்று சொல்லியே
ஏமாற்றி வந்தேன்
உன்னை

இன்றோ
விடாப்பிடியாக
அந்தக் கதையைச்
சொல்லியே ஆகவேண்டுமென
அடம் பிடிக்கிறாய்

எப்படிச் சொல்வேன்
அந்த இளவரசி
வளர்ந்து இராணியாகி
எதிரில் நிற்கிறாள்
என் முன் என்பதை

---------------------------------------

 நூல் கிடைக்குமிடம்...
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.80/-

புகழேந்தி முன்னுரை...




காதலோடு விளையாடி என்ற என் கவிதை தொகுப்பிலிருந்து நண்பர் குகை மா.புகழேந்தியின் முன்னுரை...



திசைகளைப்போல விரிந்து நீளும் இந்த ஞாபகங்களின் முடிவுறாத தெருக்களில் எங்கு நுழைந்து எங்கே வெளியேறப்போகிறேனோ தெரியவில்லை. கடந்த இருபது வருட வாழ்க்கையை முழுவதுமாக இழுத்து ஒரு நூலைப்போல விரல்களில் சுற்றி முடித்து சிலிர்த்த அனுபவத்தில் தெளிவுறத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்.

நட்பைவிட உயர்வாய்ச் சொல்ல இங்கே எதுவுமேயில்லை. அப்படிப்பட்ட உயிரான நட்பாய் காலம் வடிகட்டிக் கொடுத்த மீத நண்பன் மதிராஜ் ஒரு மிகச் சிறந்த படைப்பாளி. அவன் கணினிப்பெட்டிக்குப் பழகும் முன்பே எனக்குப் பழக்க மானவன். அவனது விரல்கள் தட்டச்சுப் பழகும் முன்பே  எழுதத் துவங்கிய எழுத்துக்களின் நண்பன் நான். அதன் அர்த்தங்களின் ரசிகன் நான். நாங்கள் நண்பர்களாவதற்குக் காரணமாக இருந்தவை எங்களின் எழுத்துக்களாகிய கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நெடுங்கதைகள்...

நிராதரவற்று ஒதுங்கிய குடிசைக்குள் தத்தமது பின்புல உளைச்சல்களோடும், அலைச்சல்களோடும் துவங்கிய வாழ்வின் தனிமையிலிருந்து கண்டெடுத்த வலிமிகுந்த எழுத்துக்களோடு வலிமையான நண்பர்களாக அறிமுகமான வர்களில் மிக முக்கியமானவன் மதி என்பேன்.

ஆரம்பத்திலிருந்தே மிகவும் எதிர்கொள்ளல் - துணிச்சல் மிகுந்தவன் அவன். அவனது வார்த்தைகளில் எப்போதும் ஒரு கல் தானாகவே தன் சிலையை அவிழ்ந்துகொள்ளும், பெரும் நம்பிக்கை தெறித்துச் சிதறும். அது எதிரே அமர்ந்திருக்கும் என்போன்ற நண்பர்களைச் சிலைகளாக மாற்றும். அப்படிச் சிலையானவன் என்கிற முறையில் இன்றுவரைக்கும் மதிராஜ் சொல்வதைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன் என்பதன் மூலமாக நான் மிகுந்த நட்போடு நெகிழ்கிறேன்.

இதற்கும் முன்பே பலநூறு நல்ல கவிதைகள் எழுதி, சில பத்து நல்ல சிறுகதைகள் புனைந்து, அரிதான மிகச்சில நாவல்கள் எனும் நெடுங்கதைகள் படைத்து பரவலாக எழுத்தாளனாக, கவிஞனாக அறியப்பட்ட அருமை நண்பன் மதிராஜ் தன் ஆதிவேர் பட்டுப் போய்விடாமல் தன்னை இன்னும் இன்னும் அப்படியே அச்சு அசலாய்ப் பாதுகாத்து வைத்திருக்கிறான் என்பதற்கான அடையாளமாகத்தான் இத்தனை நெருக்கடியான, இறுக்கமான பல சூழல்களை வாழ்ந்து கடந்தும் தன்னை அப்படியே மீண்டும் மீட்டெடுத்திருக்கிறான்.

அவன் மீண்டும் தன் விரல்களை மையிட்டு நிரப்பி எழுதுகோலாய் மாற்றியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. அவ்வகையில் மதிராஜ் இதற்குமுன் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்புகளான `அப்படிப் பார்க்காதே', `குட்டி இளவரசி' போன்ற படைப்புகளிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு தன் இத்தனைக்கால எழுத்து வீரியத்தின் இடைவெளிப் பாய்ச்சலை இந்தக் `காதலோடு விளையாடி' என்கிற தொகுப்பினூடே நிகழ்த்தியிருக்கிறான் என்கிற மாபெரும் அழகு இரகசியத்தை நான் மட்டுமே கண்டுபிடிக்கவும் கண்டுகளிக்கவும் இயலும் என்று உணர்கிறேன்.

இவ்வுலகில் காதல் கவிதைகள் எழுதத் திறம்பட தேர்ந்தெடுக் கப்பட உகந்தவர்களாக உள்ளவர்களில் மிக முக்கியமானவனாக மதியைச் சொல்வேன். 

காதல் எல்லோருக்குமானது. அது வராதவர்களோ அல்லது அதை வந்தடையாதவர்களோ இந்த பூமியில் கிடையாது எனலாம். ஆனால் காதல் வந்த எந்தவோர் ஆணாலும் கவிதை எழுதிட இயலுமா என்றால் இல்லை என்பதே இங்கு ஆமாமாக இருக்கிறது. ஆனால் மதி இத்தனை வருடங்கள் கழித்து மிக            அழகான, அறியப்படாத காதலின் உணர்வுகளை எழுதியிருக் கிறான் என்பதை இத்தொகுப்பின் கவிதைகள் வழி உணரமுடிகிறது.

மதிராஜ் இன்றைய சூழலில் மிகச்சிறந்த புத்தக வடிவமைப்பாளன். அவனது விரல்கள் வடித்த அத்தனை வடிவமைப்பு களுமே மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக்கூடிய தகுதியுடையவை. அதனாலேயே மிக உயரத்தில் புகழ் பெற்றிருப்பவர்கள் பலரும் அவனைத் தேடி தமது அடுத்தடுத்த படைப்புகளை உருப்படுத்த நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்... கொண்டேயிருக்கிறார்கள்...

அதன் தொடர்ச்சியாக கவிஞர்களின் கூடாரமாக, எழுத்தாளர் களின் புகலிடமாக, ஓவியர்களின் உறைவிடமாக அவனது இருப்பிடம் எவ்விடமாக இருந்தாலும் சிறப்பு வாய்ந்த இடமாக மாறிக்கொண்டே இருக்கிறது. கணினிப்பெட்டியின் செவ்வகப் பரப்பில் மதியின் விரல்கள் எல்லா சிகரத்தையும் எட்டி விட்டனவோ என்ற உயர்வு நவிற்சி உள்ளத்துள் பொழிகிறது பெருமழையாய்...

தன் ஓவிய விரல்கள், கவிதை விரல்கள், கணினி விரல்கள், புகைப்பட விரல்கள் இவற்றின் இடையே யாரையும், எப்போதும் சலிக்காமல் வரவேற்கும் நட்பு விரல்கள் என வியப்பூட்டுகிற கலைஞனாக தொடரும் திறம்மிக்க... அவனின் மீண்டெழுதலின்... எழுதுதலின் வாயிலாக நமக்கு கைவசப்பட்டிருக்கிற இந்தக் காதல் கவிதை நூலாகிய `காதலோடு விளையாடி' அருமையான நூலென்பேன்.

எப்போதும் அழகைத்தேடுதல், அழகுபடுத்துதல் என அழகுணர்ச்சியோடே வாழ்வதாலோ என்னவோ அவனது மனசும் அழகாகிக்கொண்டே போகிறது. அதனால்தான் இந்த நூலின் பக்கங்களில் வாழ்கிற ஒவ்வொரு கவிதையிலும் மதி காதலால் விளையாடி இருக்கிறான். அவன் மட்டுமல்லாமல் நம்மையும் காதலோடு விளையாடத் தூண்டுகிறான்.

இக்கவிதைகளை படைத்ததன் மூலம் மதியைப் படைத்தவர்கள் எவ்வளவு பெருமையுறுவார்களோ அவ்வளவு பெருமையுறுகிறேன். அதே பெருமை யோடு அவனை மனதார காதலோடும் கர்வத்தோடும் வாழ்த்துகிறேன்.

மதிக்கு ஆயிரம் ஆயிரம் நண்பர்கள். எனக்கு ஆயிரம் ஆயிரம் நண்பர்களாய் ஒரே ஒரு மதி.

பிரியமுடன்
குகை மா.புகழேந்தி

காதலோடு விளையாடி...

 

 

 

















பல்லாங்குழி விளையாடும்
பருவத்திலேயே
கற்றிருப்பாயோ
உனக்குள் என்னை
ஒளித்துவைத்து
விளையாடும்
இந்த
உயிர்விளையாட்டை
...............................................


நீ
எவ்வளவு
அழகானவள் என்று
நீயே பார்த்துக்கொள்ள
படைக்கப்பட்டவைதாம்
என் கண்கள்
..........................


குழந்தைப்பருவத்துக்குப் பிறகு
தூங்குவதற்கு
இரண்டு தலையணைகள்
தேவைப்படுவது
இந்தக்
காதல் வந்தபிறகுதான்
................................................



பல்லாங்குழி விளையாடும்
பருவத்திலேயே
கற்றிருப்பாயோ
உனக்குள் என்னை
ஒளித்துவைத்து
விளையாடும்
இந்த
உயிர்விளையாட்டை
...............................................


ஒரு பெருவனத்துக்கு நடுவே

படுத்துறங்கும்
உன் கூந்தல் வகிடென
நீண்டு கிடக்கிறது
இந்தப் பயணப்பாதை

பயண வேகத்துக்கு
ஈடுகொடுத்து
துணைக்கு வரும்
நிலவாய்
உடன் வருகிறது
உன் நினைவு

அப்போது
என் முகம் உரசிக்
கடந்துபோன குளிர் காற்று
உன் சாயலிலிருந்தது
................................................



புராதனக் கோட்டையின்
சிற்பங்கள்
உன் உருவத்தையே
ஒத்திருக்கின்றன

குகைக் கோயில்களின்
சுவரோவியங்கள்
உன் முகத்தையே
நினைவுபடுத்துகின்றன

எதிர்ப்படும் பெண்களிடம்
உன் அழகில் சிறிதாவது
இல்லாமலில்லை

தெரியவில்லை
இன்னும் எத்தனை
நூற்றாண்டுகளுக்கு
இவ்வுலகைப்
புரட்டிப்போடப்போகிறதோ
உன் பேரழகு
...........................


உன்னிடம் பேசவிடாமல்
என் இதழ்களைத் தடுத்த
வார்த்தைகளுக்கும்

என்னை நிமிர்ந்து பார்க்கவிடாமல்
உன் இமைகளைத் தாழச்செய்த
வெட்கங்களுக்கும்
பிறந்ததுதான்
நம் காதல்
......................


கை தவறி
விழுந்து உடைந்த
பொம்மைக்காகத் தேம்பும்
எதிர்வீட்டுக் குழந்தையை
உனக்குச்
சமாதானம் செய்யத் தெரிந்திருப்பது
ஆறுதலளிக்கிறது
எனக்கு

...................................................

நூல் கிடைக்குமிடம்...
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.40/-