Saturday, October 9, 2010

தபூசங்கர் முன்னுரை






பாருங்கள் திறக்கப்படும்...

காதல் கவிதைகளில் காதல் இருந்தால் போதும். கவிதை இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் மதியின் காதல் கவிதைகளில் காதலும் இருக்கிறது; கவிதையும் இருக்கிறது.

`அப்படிப் பார்க்காதே' என்பது தலைப்பு. அப்படிப் பார்த்தால்தான் காதல். அப்படிப் பார்த்தால்தான் கவிதை. அப்படிப் பார்ப்பதும் பார்க்கப்படுவதும்தான் அவனுக்கும் அவளுக்கும் பிடிக்கும். ஆனாலும் அவனும் அவளும் அவ்வப் போது சொல்லிக் கொள்வதுண்டு... `அப்படிப் பார்க்காதே' என்று. அவர்கள் மொழியில் அதற்கு அர்த்தம் `அப்படிப் பார்' என்பதே.

அப்படிப் பார்க்கிறபோதுதான் பார்க்கிற கண்கள், மகிழ்ச்சி அடைகின்றன. அப்படிப் பார்க்கப்படுகிறபோதுதான் பார்க்கப்படுகிற கண்களும் மகிழ்ச்சி அடைகின்றன.

பார்ப்பதற்காகப் படைக்கப்பட்டவைதாம் கண்கள் என்றாலும், எல்லாக் கண்களும் ஏங்குவது நம்மை யாராவது பார்க்கமாட்டார்களா என்றே. அப்படிப் பார்ப்பவர்களை அது மறப்பதே இல்லை. விழிகளுக்கும் இமைகளுக்கும் நடுவே எங்கோ அவர்களின் உருவத்தை ஒட்டி வைத்துக்கொள்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இமைகளை மூடி, அவர்களைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டுக் கொள்கிறது. பார்க்கிற சக்தியை இழந்த பிறகும் அவர்களைப் பார்த்துக் கொள்கிற சக்தி மட்டும் அவற்றுக்கு இருக்கும்.

உருகி உருகி அழைத்தால்தான் ஏன் என்று கடவுள் கேட்பான் என்கிறார்கள். ஆனால் பார்த்தாலே ஏன் என்று கேட்கும் காதல். ஆம்... கடவுளின் கதவுகளைத் தட்டத்தான் கைகள் வேண்டும். காதலின் கதவுகளைத் தட்ட கண்களே போதும்.
இந்தக் கவிதைகளை உங்கள் கண்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது... இந்தக் கவிதைகளில் இருந்து ஒரு ஜோடி கண்கள், உங்கள் கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் அப்படி.  அது காதலின் கண்கள்.

எனது கவிதை நூல்களுக்கு வடிவமைப்பை அழகாய் செய்பவர் இந்த மதி. இப்போது இவரே கவிதையும் எழுதியிருக்கிறார் அதே அழகோடு.

இந்த நூலிலிருந்து ஒன்றிரண்டு கவிதைகளை மட்டும் பிரித்தெடுத்து நான் உதாரணம் காட்டினால் மற்ற கவிதைகள் என்னைக் கோபித்துக் கொள்ளும். கவிதைகளின் கோபத்தை எதிர் கொள்ள என்னால் முடியாது. வாழ்த்துக்கள்!

அன்புடன்
தபூ சங்கர்
 ---------------------------------------------------
அப்படிப் பார்க்காதே...
காதல் கவிதைத் தொகுப்பிற்கு
அளித்த முன்னுரையிலிருந்து...
 ---------------------------------------------------

நக்கீரன் வெளியீடு
105 ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 2848 2424
விலை : ரூ.80/- 

4 comments:

  1. நல்ல முன்னுரை.
    வாழ்த்துகள் மதிராஜ்.

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது ...உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கள்ளி கட்டில் பிறந்த தாயே !
    என்னை கல்லோடிச்சி வளர்த்த நீயே !
    முல்லுகாட்டில் முளைச்ச நீயே
    என்ன முள்ளு தைக்க விடல நீயே !
    - வைரமுத்துவின் வரிகள் ...மீண்டு ஒரு அம்மாவை பற்றிய பாடல்..
    எந்த சூழலில் வளர்ந்த மனிதனாக இருந்தாலும் ஒரு துளி கண்ணீர் நிச்சயம்
    படம் : தென்மேற்கு பருவக் காற்று...
    இந்த பாடலை கேட்க அல்லது பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை அழுத்தவும்
    http://onlinetamilsongs.blogspot.com/2010/10/thenmerku-paruvakatru-songs-download.html

    ReplyDelete